mandag 3. august 2009

பொத்தகவுலகம்

நமக்காக மற்றோர் உலகம் காத்துக் கிடக்கிறது. நாம் விரும்பிய நேரத்தில் மிக எளிதாகத் தொடர்பு வைத்துக் கொள்ளவும், தொட்டுப் பழகவும், நம்மோடு அன்போடும் கனிவோடும் பேசவும், நமக்காக எவ்வளவு நேரம் வேண்டுமாலும் பொறுமையோடு காத்திருக்கவும் அவ்வுலகம் எதிர்பார்த்துக் கிடக்கிறது.
அதுதான் பொத்தக ( புத்தக ) உலகம். பொத்தக உலகில் உள்ள ஒவ்வோரு பொத்தகமும் நம் வரவிற்காக, நாம் படித்துப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக ஏக்கத்தோடு காத்துக் கிடக்கிறது. ஆனால் நாம் தான் அதனைப் பொருட்படுத்துவதில்லை.
பொத்தக நிலையங்களில் தலைசிறந்த அறிவியல் மேதைகளும், அரசியல் தலைவர்களும் வல்லுநர்களும் நூல் வடிவிலே நமக்காகவே காத்துக்கிடக்கும் பொழுது, ஆர்வத்தோடும் அவர்களை அணுகி அவர்தம் அறிவைப் பெற்று நாம் ஏன் பயன் அடையக் கூடாது?

நாம் ஒரு நூலைப் படிக்கும்போது அறிஞர்களோடும் தலைவர்களோடும் நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமான தொடர்புவைத்துக் கொள்கிறோம்.
மேலும், உயிரோடு வாழ்ந்து வரும் அறிஞர்களும் தலைவர்களும் நம்முன் வந்து அப்பொழுதைக்குத் தேவையான செய்திகள் பற்றிப் பேசினாலும் விரைவிலும் பரபரப்பிலும் மேம்போக்காக, பொறுப்பற்ற முறையில் பொருத்தமற்ற சொற்களைக் கொண்டு பேசிச் செல்வர்.

ஆனால் நூல் வடிவில் உள்ள அறிஞர்களும் மேதைகளும் எதையும் பொறுப்போடும் பொறுமையோடும் ஒரு முறைக்குப் பன்முறை ஆய்ந்து, பார்த்து, சிறந்த சொல்வளத்தோடு திறம்பட எடுத்துக் கூறுவர். எனவே நூல் வடிவில் உள்ள அறிஞர்களோடு தொடர்பு கொள்வதுதான் எல்லா வகையினும் எளியது, சிறந்தது, பயனுள்ளது!

புதுவை கா.வில்லவனின் ” உயிர்ப்பு” என்ற பொத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. )

நன்றி.
கமலா. கந்தசாமி ( சிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக் களஞ்சியம் )

Ingen kommentarer:

Legg inn en kommentar